செவ்வாய், 28 ஏப்ரல், 2015

' குழந்தை' கவிதை அறிமுகம் :

கள்ளிக் காட்டு கம்பனின் அறிமுகத்தோடு ஆரம்பம்:கபிலன் வைரமுத்து.....!குழந்தைப் பற்றிப் பேச வந்திருக்கும்....என்குழந்தை!சிசுவில் இவனைத் தலைக்குமேல் தூக்கி அண்ணாந்து பார்த்தேன்! இன்று தலைக்கு மேல் வளர்ந்த காரணத்தால் அண்ணாந்துப் பார்க்கிறேன்!இவன் மழலைப் பேசும்போதே இலக்கணமாகப் பேசியவன்! அப்போதே....இவன் கவிஞனாகிவிடுவானோ என்று கவலைப் பட்டேன்!என் சந்தேகம் இன்று சரியாய்ப் போயிற்று!எங்கள் ஆசையில் விளைந்த இரண்டாம் வித்து! இவன் மீசையில்லா வைரமுத்து!மகனே! தமிழுக்கு உன்னை வார்க்க நினைக்கிறேன்! தாயகம் உன் குரல் கேட்க நினைக்கிறேன்!உன்னையும் கவிஞனாய்ப் பார்க்க நினைக்கிறேன்! உன்னிடம் மட்டுமே தோற்க நினைக்கிறேன்!வா! சூரிய ஒளியில் சொற்கள் எடுத்து...அன்னைத் தமிழுக்கு அணிகலன் உடுத்து!என்றன் என்றன் மகன் என்பது தவிர்த்து...உன்றன் தந்தை என்பதைக் காட்டு!

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

கூடும்! வீடும்!

சாலையோரம் கட்டிக் கொண்ட ஒரு குடிசை வீடு அரசாங்க அதிகாரிகளால் இடிக்க இருப்பது கண்டுஇதயம் சிதறிப் புலம்புகிறாள் ஒரு ஏழைக் குடும்பத்தலைவி!அந்தத் தாயின் மொழியிலேயே அவலம் அரங்கேறுகிறது!அவள் வட்டார வழக்கில் கொட்டாரம் அடிக்கும் அந்தக் கவிதையைக் கேளுங்கள்! ஏலே! தொரச்சாமி எங்கடா உங்கப்பன்?கள்ளுக் கடைக்குப் போயிருப்பான்!கையோட கூட்டியாடா! வீட்டை இடிக்கிறாஹ! வெறப்பாஹ நிக்கிராஹ! ஓட்டப் பிரிக்கிராஹ! ஓடிப்போய்க் கூட்டியாடா!சாமிகளா! சாமிகளா! சர்க்காரு சாமிஹளா! சிலந்திக் கூடழிக்க சீட்டு வாங்கி வந்திஹளா?சித்தெரும்ப நசுக்கத்தான் ஜீப்பு ஏறி வந்திஹளா? அரைச் சென்டு வீடிடிக்க ஆர்டர் வாங்கி வந்திஹளா? வெள்ளாட்டுக் காம்பினிலே விஷம் வடியக் கனாக் கண்டேன்! ஓடையெல்லாம் ரத்தம் ஓடிவரக் கனாக்கண்டேன்! காத்துக் கறுப்பாச்சே! கண்ட கனா பலிச்சிடுச்சே! எள்ளுச்செடி மேல இடி வந்து விழுந்துடுச்சே!புல்லெடுக்கப் போன மூத்தவளக் காணலியே!ஏழாவது படிக்கப் போன இளையவளும் திரும்பலியே!ஒத்தையில நானிருந்து உலைக்கரிசி போடயிலே வாய்க்கரிசி போட வந்து வாசலில நிக்கிறாஹ!எட்டி உதச்சாலே இத்து விழும் சுவருக்கு....கடப்பாரை எதுக்கு, கவர்மென்டு ஆளுகளே!நான்பட்ட பாடு,நாய் படுமா? பேய் படுமா? கடையும் தயிர் படுமா?காஞ்சிபுரம் தறி படுமா ? முன் சுவரு எழுப்பத்தான் மூக்குத்தி அடகு வெச்சன்! பித்தளை குடம் வித்து பின் சுவரு எழுப்பி வெச்சன்!மரக்கதவு செஞ்சு மாட்ட காசில்ல ராசாவே! கோணியில கதவு செஞ்சு கோட்டைக்கு மாட்டி வெச்சன்! சீட்டுப் புடிச்சு வெச்சு, சித்தாளு வேலை செஞ்சு ஓட்டைக் கூரைக்கு ஒரு பகுதி ஓடு வெச்சன்!கூடு கலைச்சாக்கா குருவிக்கு வேற மரம்! வீடு இடிச்சாக்கா எங்களுக்கு ஏது எடம்!ஐயா எசமானே! அஞ்சு வெரல் மோதிரமே! பாருமய்யா கண் திறந்து! தண்ணீ புடுச்சு வெக்க தகரக் கொடம் ஒண்ணிருக்கு! வீட்டை விட வயசான வெளக்கமாறு ஒண்ணிருக்கு! பத்த வெச்சு பத்து தேச்ச பாத்திரமோ ரெண்டிருக்கு! எம்புருசன் திங்க மட்டும் எவர்சில்வர் தட்டிருக்கு!போங்கய்யா போங்க நீங்க! புண்ணியமாப் போகட்டும்! என் வீட்டு நாய்க்குட்டி இன்னைக்கும் தூங்கட்டும்! அழுதாலும் ஏழை சொல் அம்பலத்தில் ஏறாது! அருகம்புல் புத்தி சொல்லி அருவா கேக்காது! இடிங்கய்யா இடிங்க! இத்த வீடுதான் இடிங்க! கூரையப் பிச்செரிங்க!கொடியெல்லாம் அறுத்தெரிங்க! கண்ணாடிக் கடைக்குள்ள காட்டு யானை புகுந்தது போல் முன்னாடி பின்னாடி முழுசா நொறுக்கிருங்க! கடைசியில ஒண்ணு மட்டும் கால் பிடிச்சு கேக்கிறேன் ஐயா!சிகரெட்டு பிடிப்பவரே செவிசாச்சு கேளுமய்யா!கொல்லையில எம்மகதான் மல்லிகைய நட்டு வச்சா!நீர் குடிச்ச அந்த செடி வேர் புடுச்சு நின்னிருக்கு!பூப்பூக்கும் முன்னால கத்தி எறியாதீக! கடப்பாரையும் வீசாதீக! ஆசையில வெச்சக் கொடி, அசங்காம இருக்கட்டும்! அவ வெச்ச மல்லிகைதான்.....எவளுச்கோ......பூக்கட்டும்....!!!

சனி, 25 ஏப்ரல், 2015

நதியோடு நாமும்

மனிதர்களோடு மட்டுமல்லாமல் அக்றிணையோடு பேசுபவன் பைத்தியக்காரன் மட்டுமல்ல, அது ஒரு ரசனைக்குரிய கவிஞனாகவும் இருக்கலாம்! அவன் நிலவோடு பேசுவான். சூரியனை சண்டைக்கு இழுப்பான்.வானத்தோடு வாதிடுவான்! மேகத்திற்கு தூது விடுவான்! விண்மீன்களோடு விளையாடுவான் ,நதியோடு உரையாடுவான்! இதோ, நதியிடம் கேள்வி கேட்டபடி கவிஞன் ஒருவன் நதிக்கரை ஓரமாக நடந்து செல்கிறான்.நதியும் அவனோடு உரையாடியபடி ஓடிச் செல்கிறது. பாறைகளுள் நுழைந்துப் பயணப்படும் அந்த நநி அவனோடு பரிபாஷைப் பேசிக் குலவுகிறது!வேதாளம் சொல்லும் கதைக்குப் பதிலை விக்ரமாதித்தன் கூறுவதைப் போல, பாதாளத்தில் பரவும் நதி, அவனுக்கு பதில் சொல்லியபடி விரைந்து செல்கிறது! பதில் கேட்டுக் கவிஞன் உறைந்து போகிறான்: நதியோடு உரையாட விழைந்து நதியைப் பார்த்துக் கொஞ்சம் நில் உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும்! .உனக்கு பதில் சொல்ல...நான் நின்றால் என் பெயர் நதி ஆகாது! சரி.... உன்னோடு கரையில் ஓடிக்கொண்டே கேட்கிறேன் சொல்....நதியே...சொல்......நீ இன்பப்படும்படியான நிமிஷம் எது ? எப்போது உன் ஆன்மா...ஈரம் கொள்கிறது?மலைகளின் மனங்களில் சுரந்து, காடுகளின் நடுவே கால்கள் நனைத்தபடி ,பாறைகளின் பொந்துகளில் பதவிசாகப் புகுந்து சலசலவென்று சங்கீதம் பாடிக்கொண்டே செல்லும்போதா? மலைகளின் மர்ம இடுக்குகளில் சிருங்காரமாக சினுங்குகிறாயே, அப்போதா?காடு தாண்டி வந்ததினால் கால்களுக்கும் உனக்கும் , தாழ்ந்த கிளைகள் தடவிக்கொடுத்து, வருடியபடி ஒத்தடம் கொடுக்கிறதே அப்போதா? திருப்பங்கள் கண்டால் சலங்கை கட்டி தில்லானா பாடுவாயே! அப்போதா? நீ பெண்பால் என்று புரிந்துகொண்ட கிளைகள் பூத்தூவுகிறதே,அப்போதா?உனக்கே தெரியாமல் காற்று உன்னுள் புகுந்து உனக்கு கிச்சுக்கிச்சு மூட்டுமே , அப்போதா? நடந்தபடியும், ஓடிக்கொண்டும் இருக்கும் நீ ,அருவியாக விஸ்வரூபம் எடுப்பாயே, அப்போதா?அரைஞான் கயிரோடும், கோமணத்தோடும் நம் பாமரச் சிறார்கள் உன் மீது குதித்து உன்னை குதூகலப் படுத்தும் போதா?நதியோரம் எம்குலப் பெண்கள் குளிக்கும் போது அங்கம் நனைப்பதில் புளாங்கிதம் கொள்வாயே அப்போதா? நதிசட்டென்றே நின்றது, கவிஞன் கேட்ட கேள்விகளில் உடன்பாடு இல்லை போலும்! மனிதனாய்ப் பார்! கேள்! எனது இன்பமான தருணம் எப்போதா? சொல்கிறேன், கேள்: மனிதன் வேர்வையோடு நானும் சேர்ந்து வயல்களில் பயிர்கள் வேர் நனைப்பேனே , அப்போது! வெள்ளிக் குடமானால் என்ன, மண் பானையானால் என்ன, பாகு பாடு பாராமல் நீர் நிரப்புகிறேனே, அப்போது.....! வியந்தேன்....நதியில் குதித்தேன்...குளித்தேன்! இது ஞானக்குளியல் அல்லவா...!

வியாழன், 23 ஏப்ரல், 2015

சுமக்க முடியாச் சிலுவை!

சொன்னவள் நான்தான்! உனக்கும் சேர்த்து சுவாசிக்கிறேன், என்று சொன்னவள் நான்தான்! என் கண்களால் உன் ஒருவரைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை!சொன்னவள் நான்தான்! உங்கள் வாழ்க்கை எனும் கோப்பையை என் உயிர் பிழிந்து ஊற்றுவேன்! சொன்னவள் நான்தான்! நம் திருமணத்திற்கு வானம் நட்சத்திரங்களையும், கடல் முத்துக்களையும் அட்சதை போடும்! என்று சொன்னவள் நான்தான்! ஒருவேளை நாம் பிரிந்தால் ....மழை மேல்நோக்கிப் பெய்யும்! கடல் வற்றி அதன் மேல் ஒட்டகம் ஊர்வலம் போகும் ! காற்று மரிக்கும்! என்று சொன்னவள் நான்தான்! இதோ அடிக்கோடிட்ட இந்த வார்த்தைகளால் இதைச் சொல்வதும் நான்தான்! என்னை மன்னித்து விடுங்கள்! என்னை மறந்து விடுங்கள்!நான் காதல் கொண்டது நிஜம்! கனவு வளர்த்தது நிஜம்! என் ரத்தத்தில் இரண்டு அணுக்கள் சந்தித்துக்கொண்டால் உங்கள் பெயரையே உச்சரித்தது நிஜம்!என்னை மன்னித்து விடுங்கள்! என்னை மறந்து விடுங்கள்!காதலனைப் பிரிந்த எனக்கு, காதலைப் பிரிய முடியவில்லை!இந்தியக் காதல் என்பது காதலர்கள் மட்டும் சம்பந்தப் பட்டதில்லை! இந்தியா காதல் பூமியாக இருக்கலாம் ஆனால் காதலர் பூமியல்ல! காதலுக்குச் சிறகு மட்டுமே தெரியும்! கல்யாணத்திற்குத் தான் கால்களும் தெரியும்! எனக்குச் சிறகு தந்த காதலா, என் கால்களின் லாடங்களை யாரரிவார்? என் தாயை விட சாய்வு நாற்காலியை மிகவும் நேசிக்கும் என் தந்தை! சீதனம் கொணர்ந்தப் பழைய பாய் போல் கிழிந்த என் தாய்! பூப்பெய்தியதைக் கூட புரிந்து கொள்ளமுடியாத என் தங்கை! கிழிந்த பாயில் படுத்தபடி கிளியோபாட்ராவுக்காக ஏங்கும் என் அண்ணன்! கருப்பு வெள்ளை டிவியைக் கண்டபடிக் கலர்க் கனவுகள் காணும் என் தம்பி! ஆக இத்தனைப் பேருக்கும் மாதாமாதம் பிராணவாயு வழங்கும் ஒரே ஒரு நான்!கால்களில் லாடங்களோடு எப்படி ஓடி வருவேன் உங்களோடு? என்னை மறந்து விடுங்கள்! என்னை மன்னித்து விடுங்கள்!மேலை நாடுகளில் கல்யாணத் தோல்விகள் அதிகம்! இந்தியாவில் காதல் தோல்விகள் அதிகம்! இந்தியா காதலின் பூமிதான்! காதலர் பூமியல்ல! போகிறேன் ....உங்களை மறக்க முடியாதபடி! நீங்கள் என்னை மறப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்......போகிறேன்......என்னை மன்னித்து விடுங்கள்! என்னை மறந்து விடுங்கள்!

புதன், 22 ஏப்ரல், 2015

சுமக்க முடியா.....சிலுவை! ஒரு கண்ணோட்டம் !

இந்த நாட்டில் பலருக்குக் காதலிக்கத் தெரிந்திருக்கிறது! ஆனால் சிலருக்குத்தான் காதலை நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது!இங்கு எத்தனையோ காதல்கள் விதைக்கப்பட்ட மறுநாளே புதைக்கப் பட்டு விடுகின்றன!பலப் பூக்கள் கல்லறைகளில் விழுவதற்கென்றேப் பூக்கின்றன! பல கனிகள், கனிகின்ற அவசரத்தில் வெம்பி மறைகின்றன!அதற்குக் காதலர்கள் மட்டும் காரணமல்ல! ஒரு விதை முளைக்க..எப்படி மண், ஈரம், காற்று, வெப்பம் ஆகிய நான்கும் தேவையோ, அதைப்போல, ஜாதி, பொருளாதாரம், மதம், மரபு ஆகியவற்றில் எந்த ஒன்று குறைந்தாலும் காதல் கற்பத்திலேயே கரைந்து விடுகிறது!இந்தக் கவிதையின் நாயகியும் காதலை ஏற்றுக் கொண்ட போதும், கடைசியில் காதலனை ஏற்றுக் கொள்ள முடியாத கட்டாயத்தில் காதலனையே இழக்கிறாள்! பருவம் எனக்குக் காதல் எனும் சிறகைத் தந்தது! ஆனால் யதார்த்த வாழ்க்கை அந்த சிறகுகளைக் கத்தரித்தது!கால்களில் லாடங்களோடு என்னால் உன்னோடு ஓடிவர முடியாதே ....காதலா! இப்படித்தான் இந்தியாவில் பலக் காதலர்களுக்கு ...உன்னைக் காதலிக்கிறேன் என்பது தமிழ்த்தாய் வாழ்த்தாகவும் என்னை மறந்துவிடு என்பது தேசிய கீதமாகவும் ஒலிக்கிறது! யதார்த்தமும், அழுத்தமும்,படிமங்களும்,குறியீடுகளும், கொண்ட இந்த உயிரூட்டக் கவிதையில் லட்சக்கணக்கான இளைய இதயங்களின் துடிப்பு ரகசியமாய்க் கேட்கிறது! இதோ கவிதை உங்களுக்காக.....: " சுமக்க...முடியாச்....சிலுவை".:

திங்கள், 20 ஏப்ரல், 2015

தீயிலும் கொடிய தீ! ஜாதி!

சாதிக்கப் பிறந்த மானுடத்தை சாதிக்குள் பாகுபடுத்தி மலிவாக்கி மகிழ்ச்சி கொள்ளும் கூட்டம்! மனதை விசாலப் படுத்த முயலாமல் , மயானத்தை விரிவாக்கி எக்காளமிடும் இரண்டு கால் விலங்கினம்! எரியாத அடுப்புடன் நாளும் மன்றாடும் ஏழையின் குடிசைக்கே நெருப்பு வழங்கும் வள்ளல்கள்! இந்த ஜாதிக் கத்தி எதிர்த்தவனை அழிப்பது மட்டுமல்ல எடுத்தவனையும் ஒழிக்குமென்பது தெரியாதா? ஜனத்தொகை விடவும் பிணத்தொகை கூடினால்....இனத்தொகை என்னாகும் ? எந்த மனித இனம் ஜாதி அடிப்படையில் நிறம், குணம், ரத்தம், உருவத்தில் வேறுபட்டன? சிந்திக்க வேண்டாமா ? உலகம் ஒரு பக்கம் விண்ணைத் துளைத்து விடியவைக்கும் அளவு உயரே! நாமோ பூமியைத் துளைக்கும் புழுக்களாக கீழ்நோக்கி கீழ்நோக்கி சிந்தனை வறட்சியுடன்! உலக மானுடம் மாற்று கிரகம் செல்ல சிறகு தயாரிக்கிறது! நாமோ இருக்கும் உடைகளையும் களைந்து பின்னோக்கும் நாகரிகத்தில் நரகம் நோக்கி...ச்சீ...வெட்கம்! இங்கு வளர்ந்து வரும் ஜாதிகள் நடுவே...தொலைய இருப்பது மனித ஜாதியே! இப்போது தேவை தீப்பந்தம் ஜாதி எனும் சடலம் எரிக்க! இன்னும் ஆயுதம் தேவை வகுப்புவாத ஆணிவேர் அறுத்தெறிய! வெண்புறா தேவை ! அவை திரும்ப திரும்ப ....தெற்கிலும்....தேவையான .... இடங்களிலும் பறந்து கொண்டிருக்கவே!

நடேஷ் பிறந்த தின வாழ்த்து !

பிறந்த நாள் வாழ்த்து ! பிறந்த நாள் வாழ்த்து! நாளாம் நாளாம் திருநாளாம்! நடேஷுக்கு இன்று பிறந்த நாளாம்! நாட்டுமக்கள் அனைவரும் கொண்டாடக் காத்திருக்கும் நந்நாளாம்! கனெக்டிகட் நகரம் களைக் கட்டியதைக் காணக் கண் கோடி வேண்டாமோ? வெள்ளைமாளிகை வெரிச்சோடிப் போச்சே! ஓடிப் போன ஒபாமா எங்கேன்னு தேடுதே குடும்பமும் அவர் குளாமும்! நேரில் வாழ்த்தவே நேர்மை மனிதர் ...மிடில்டவுன் வந்தது மீடியா அறியாது! அனுஷ நட்சத்திரம் அமெரிக்காவுக்கு லாபமாம்! இந்த விஷயம் ஜோசியர் அறிந்திருந்தால்..அது அவருக்கு லாபமாயிருக்கும்! ரூபாவின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு மாறுபடலாம்! ஆனால் ...நடேசன் மதிப்பு அமெரிக்காவில் உயர ரூபாவின் ஆதரவு அவசியமன்றோ! நேரம் போவதறியாது நேத்ரா உடனுள்ள சமயம்! எத்திக்கும் இனிமையுரும், ரித்திக்கின் சேஷ்டை கண்டால்! வருடா வருடம் பிறந்த நாள் வந்து போகும்! வயதும் கூடும் காலக் கணக்கில்! ஒவ்வொரு ஆண்டும் நம்மில் பெறும் மேன்மை ஒன்றே, நம்மை அடையாளம் காட்டும்! குடும்பமே குதூகலம் கூடும்! அவ்வாறே கூடட்டும் இல்லறத்தில் இனிமைகள்! இந்த இனிய நாளைப் போலே வரும் ஆண்டுகள் யாவும் இனிதே அமையவும், மகிழ்ச்சி என்றுமே எப்போதும் காணவும்...வாழ்த்துகிறோம் மனமாரவே! வாழ்க பல்லாண்டு குடும்பத்துடன் குஷி பொங்கவே! - ஆன்டியுடன் கா.ம.க ! 20-4-2015

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

காதலும் கற்று மற!

ரம்பையா? அவள் என்ன.......அவளைப் படைத்தபின் பிரம்மன் கைகழுவும் நீருக்காக காத்திருந்த தாமரைகள்..... பூத்துக்குலுங்கும் அளவு அழகி என்ற நினைப்பா......? த்தூ.........! இருக்கும் தாமரைகள் குளத்தில் இன்னும் மடியாதிருந்தால்...போதாதா....! மானுடா......சுதாகரித்துக்கொள்.! மனதைத் தெளியவைத்துக்கொள்! நீதெளிந்தால்...... காற்றுக் கைகட்டி மண்டியிடக் காண்பாய் ! சூரியன் எழ....உனை அனுமதி கேட்டு எழக் காண்பாய்!தென்றல் சட்டைக்குள் சடுகுடு விளையாட உணர்வாய்! மழைவாசரனை மனதை வருட ரசிப்பாய்! இந்தக் குடுப்பினை இன்னும் வேண்டாமா? யோசி! விதைக்கப் படும்போதே.....புதைக்கப் படக்கூடிய எண்ணங்களுக்கு இடமளிக்காதே! தரணியில் ,மேலை நாடுகளில கல்யாணத் தோல்விகள் அதிகம்! தமிழ்நாட்டில் தோல்விகளுக் கென்றெ உருவாகின்றன இந்தக் காதல்! இது தேவையா? இந்தியாக் காதலுக்கான பூமி! காதலர்களுக் கானதல்ல! புரிந்து கொள்! தெரிந்து வாழ் ! ...............சும்மா.........டமாஸா.......ஒரு.....கற்பனை! இது எப்டி இருக்கு ? !

காதலி! காதல் மற!

காதலும் கற்று மற !
காதல்! என்று சொல்கிறபோது குற்ற உணர்வு வேண்டாம்! அது பழிச் சொல் அல்ல! அழகு தமிழ் மொழிச் சொல் அது! காதலுக்கு வக்கீல் தேவையில்லை! உனக்காக மற்றவர் கனவுகாண முடியுமா? அல்லது உனக்காகத் தான் வேறொருவர் சுவாசிக்க முடியுமா? இது உன் கனவு! உன் சுவாசம்! உன் காதல்! நீ நேசிக்கும் அவனோ, அவளோ உன்னை நேசிக்க வேண்டும் என்கிற கட்டாய மில்லை! நீ காதலி ! உனது கண்களை மூடி இரு புருவ மத்தியில் அவளை/ அவனை நிருத்து ,
உடலும் உள்ளமும் ஒரு புள்ளியில் சந்தித்து ஒரு பூப்பூக்கிறதா? அந்தப் பூவே காதலெனக் கொள்! அப்படியில்லையா, அந்த எண்ணத்தையே அடியோடு கொல்!
நாட்கள் நீளம் குறைவதைக் காண்பாய்! மற்ற வேலைகளுக்கு நேரம் கிட்டும்! தலை கலைந்தாலும் அது உன்னை பாதிக்காததை உணர்வாய்! ரேஷ ன் கடைக்கும் விரும்பியே போவாய்! தாடி வளர்ந்தால்...தேடி ஒழிப்பாய்! வாழ்வு அர்த்தப் படும்! காலத்தால் நகைக்கப் படுவதே காதல் உணர்வென்பதை உணர்வாய்! வாழ்வை நேசிப்பதில் அர்த்தத்தைக் காண்பாய்! மேகமே காகிதமாய், நீலவானம் பிழிந்து மைகொண்டு, கனவில் தொல்லைதரும் காதலிக்குக் கவிதை எழுதிய நேரம் உருப்படியாய் ஏதாவது செய்வது நன்றென்று புரியும்! .......வாழ்க!
வாழ்க வையகம் !

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

பிரிவின் பெருமை!

பிளந்தால் அணுகொண்ட ஆற்றல் தெரியும்!
கொஞ்சம் பிரிந்தால் மெய்க் காதல் மேன்மை புரியும்!
எரியாத மெழுகுக்கு ஒளி இல்லையே!
பிரியாத உறவுக்குப் பலம் இல்லையே!
உதடு பிரியாமல் ஒரு சொல் இல்லையே!
உடலைப்  பிரியாமல் உயிருக்குப் பிறப்பில்லையே!
கரம் பிரியாமல் ஒரு செயல் இல்லையே!
கரை பிரியாமல் ஒரு நதி இல்லையே !
இமைப் பிரியாமல் ஒரு காட்சி இல்லையே !
இரவுப் பிரியாமல் ஒளி கொண்டப் பகலில்லையே !
காலைக் கதிரவன் கடல் விட்டு எழுவதும் ,
மாலைக் கதிரவன் மலை தொட்டுப் பிரிவதும்,
இயற்கை இயற்கை இயற்கையடி!
கடல் விட்டு முகில் பிரிந்தால் மழை உறுதி!
காற்று விட்டு சுரம் பிறிந்தால் இசை உண்டு!
தறியோடு இழை பிரியும் உடையாகவே!
தளிரே நம் பிரிவெல்லாம் உறவாகத்தான்!
உறவு பலம் கூடத்தான்! மெய்க் காதல் மேன்மை புரியுமே பிரிவினாலே!!

திங்கள், 13 ஏப்ரல், 2015

அரை நூற்றாண்டு காணும் ஏ.பி.எஸ்

50 ஆம் ஆண்டு காணும் ஏ.பி.எஸ்
நம்பிக்கை, நாணயம் இதுவே எங்கள் தாரக மந்திரம்! துணிகரமான இந்த முயற்சியில் விளைந்ததே பல துணிரகம்! மேல கோபுரத் தெருவில் உதித்த இந்தக் கடைமேல் வைத்திருக்கும் உங்கள் நம்பிக்கைக்கு நன்றி! முதல் மாடியில் காணீர் முதல் ரக ஆடைகளை! அன்று முதல் இன்று வரை தரம் குறையா சேவை எங்கள் உத்திரவாதம்! ஆள் பாதி, ஆடை பாதியாம் பழமொழி! எங்கள் ஆடை அணிபவரை முழுமையாக்கும் ! அணிந்தே அனுபவிப்பீர் இந்தப் புதுமொழி!
இங்கு அனைத்துப் பொருட்களும் சலுகை விலையில் ! அதன் சுருக்கமே Anaithu Porutkalum  Salugai விலையில் கிடைக்கும் பாண்டிய நாட்டில் ஓரிடம் ...... A P S Hall ! வாரிச்சென்றே ஆதரவு அளித்த உங்களுக்கென்றே....பல ரகங்களை நியாய விலையில் வாரிவழங்குகிறோம் என்றுமே! தொடர்ந்து தங்களுக்குப் பணிபுறியவே....எங்களுக்குத் தொடர்ந்தே ஆதரவளிப்பீர்!
நன்றியுடன்........உங்களுக்காக......A P S Hall!
-  கா.ம.க

புத்தாண்டு புதிதாய்

புத்தாண்டு புதுசு !
வருடா வருடம் வந்து போகும் புது வருடம்! நம்மிடம் புதிதாய் என்ன ஒன்றைக் கண்டோம் என்பதே , வருடப் பிறப்பில் பொலிவு சேர்க்கும் புதிதாகவே! திறந்த புத்தகமாய் மனதைத் திறந்த வெளிப்படை வாழ்வில் வெளிச்சம் கூடும், மனமும் வெளுக்கும்! கருவறைக்கும் கல்லறைக்கும் நடுவில் வாழும் வாழ்க்கை நிரந்தறமாக நினைவில் தோன்றும்! பிறப்பில் வந்த வெறுங்கையோடே இறப்பிலும் செல்வதே உலகறிந்த உண்மை! இடைப்பட்ட வாழ்வில் செழிப்பாய் வாழ்ந்தால் இறப்பும் இனிமையாகும்! ஏழையாய் பிறப்பது எவன் கையிலுமில்லை! ஏழையாய் வாழ்வது எவன் செய்யும் பாவமோ? நினைவினில் செழுமை கொண்டால் வாழ்வும் செழுமை காணும்! பாறையின் நடுவே பதுங்கியே வாழும் தேரைக்கும் கூட படைத்தவன் பசி தவிர்ப்பான்! மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் நம்பிக்கை கொண்டால்....எதிர்கால பயங்கள் எட்டியே ஓடும்! மழை வந்தால் குடை விரியும் எது வந்தால் மனம் விரியும்? குவளை நீர் சில மணி காணும்! குடம் நீர் நாள் காணும்! குளம் நீர் வருடம் காணும்! உன் மனம் குவளையா? குடமா? குளமா? அல்லது குளப்பமா? எண்ணுவீர் இத்திருநாளில் இன்றே! எஞ்சிய வாழ்வினில் எண்ணங்களும் புதிதாய்ப் பிறக்கட்டும், வருடம் போலவே!   வருடா வருடம் தானாய் வயது கூடும்! நம் முயற்சியில் நம்மிடம் கூடியதெது என்பதே நம்மைக் காட்டும்! அனுபவம் உணர்த்திய பாடம் எல்லாம் உணர்வாய் அழகாய் கொட்டிவிட்டேன்! பயன்தருமானால் பயனடைவீர் நன்றே! அனைத்து வளங்களும் அநேகம் பெருவீர்! புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
நன்றியுடன்  -  கா.ம.க

காட்டுப்பாக்கன் பட்டி

கண்ணிமை கவிழும் போதும், கனவுகள் தவழும் போதும்! என்னைத் தொலைத்துவிட்டு, நானே தேடும்போதும்!

என்னைப் பிழியுதம்மா எந்தன் ஊர் ஞாபகங்கள் ! குளமில்லை! கோயிலுமில்லை! வனமில்லை! வளமுமில்லை! வளர்ந்த ஊர் 
ஒன்றைத் தவிர, வரலாறும் அதற்கு இல்லை! இருந்தாலும்  மனசுக்குள்ளே, நினைக்கும்போதே  ஏனிந்த  பட்டாம் பூச்சி !
இளமையின் கல்வெட்டாக , இந்த இறந்த நாள் ஞாபகங்கள் !
சிறகு முளைக்கும் முன்பே, பறவையாய்ப் பறந்த அந்த நாட்கள்!இப்போது சிறகிருந்தால் அத்திசைத் தேடிப் பறப்பேன்! வரப்பிலே படுத்தபடி வசதியாய் நானழுவேன் ! என்னைப்  பிரசவித்த  அந்தப்
பிரதேசம்  அதைவிரலில்  தொட்டுக்  கண்ணில் ஒத்துவேன்!
ஓடி நான் மகிழ்ந்த ஓடையில் குதிப்பேன்! தேடிப் பிடித்தே தென்னையில் ஏறுவேன் ! பாதையில் நடந்தே பாடி மகிழ்வேன்!
அறிமுகம் செய்த அந்தியை ரசிப்பேன்! நலம் விசாரிக்க நிலவை நாடுவேன்! வெட்ட வெளியின் விந்தைகள் வியப்பேன்! சிந்தனை முளைத்தது அங்கே! சிந்தை மங்கியது இங்கே! 
அருமையை வாழ்வில் உணர்த்திய  என் மக்கள் , வறுமையில் வாழ்வதைக்  கண்டு நெருஞ்சிமுள்  தைக்குதே என் நெஞ்சை!
சொல்லாத  கவிதை நான் சொல்லி முடித்த பின்னும் , ஏதோ ஒன்று 
பிசையுதே நெஞ்சை! உள்ளூரும் எண்ணம் எல்லாம் உணர்வாக வடித்த பின்னே, ஒன்று மட்டும் தெளிவாய்  என்னுள் கண்டேன்! தள்ளாத வயது வந்தால்....தாய் மண்ணே தாயாய்க்காண்பேன்! 
கட்டடா மகனே என்பேன் ! கல்லறை என் பிறந்த மண்ணில் !

சனி, 11 ஏப்ரல், 2015

ரத்தமில்லா ராமர்கள்

முப்பத்து மூன்று கோடைகள் கண்டு முடித்தாள் அவள்!
தன் பெயரைத் திருமணப் பத்திரிகையிலேனும் அச்சில் பார்க்க ஆசைப் பட்டாள் அவள்.ஆனால் அச்சு எந்திரங்களைப் போல்
மனித மனங்களும் எந்திரங்களான அவல நிலை!
அவள் நொந்து நொந்துநூலாய்ப் போனது ஒருவேளை தன் கண்ணீர் முத்துக்களைக் கோப்பதற்குத்தானோ!
சிறு பிராயத்தில் பூக்களின் அணிவகுப்பு மரியாதையைத் தன் கூந்தலில் ஏற்றுக் கொண்டு கௌரவப்படுத்தியவள்!
இன்றோ, பூசூடுவது .....தான் விதவையல்ல எனக் காட்ட மட்டுமே!
முன்பெல்லாம் கனவுகாண உறங்கிய இவளுக்கு இன்று உறக்கமே கனவான கதையானது!
முன்பெல்லாம் வேடிக்கைக் காண ஜன்னல் தேடினாள்!
இன்று ஜன்னல் முன் அசைவற்று அமர்ந்து ஜன்னலுக்குத்  தானும்
ஒரு கம்பியானாள்! அவள் சிரிப்பு என்பது இதழிலிருந்து மறைந்து
ஞாபகப் பொருளானதே! பாவம்! மன்மதன் அவள்மீது எய்த மலர்க்கணைகள் யாவும் இன்று சுள்ளி விறகான நிலையேனோ!
அவள் மூச்சு வெப்பத்தில், மூக்குக் குத்தித் தங்கம் இளகுதே!
இந்த வரதட்சிணை வில்லை வளைக்கப் போவது யார் என்றே ஏங்கும் சீதையானாள்!
ராமர்களுக்கோ இன்று ரத்தமில்லை!   ஜனகனோ பாவம் சாய்வு நாற்காலியில்!
இனி சீதைகளே வில்லை ஒடித்துக் கொள்ளும் நிலை நியாயம் தானோ!

திங்கள், 6 ஏப்ரல், 2015

தையலும் ! தைப்பவளும்!

ஊர் கிழிசலையெல்லாம் எப்பவுமே  தைக்கிறவ நான் !
என் வாழ்வின் கிழிசலத் தைக்க எங்க போக நான்!
உறவுக்காக  ஏங்கித் தவிக்குதே எம் மனசு!
என் வாழ்க்கை என்றுமே ஒரு புது தினுசு !

கண்ணான கண்ணே ஒன்ன என்ன சொல்லித் தாலாட்ட?
குடமாக் கண்ணீரு வச்சிருக்கேன், கண்ணே உன்ன நீராட்ட!
அம்மான்னு சொல்லாட்டி அன்பே ஒண்ணும் பரவாயில்ல!
அப்பாவும்  உனக்கு இங்க நான்தான் என்னன்னு நான் சொல்ல!
எல்லாமே சொந்தம்தானே, யாருக்காக வாதாட !
இத்துப் போனக் கந்தலுக்கு, எந்த தையல் நான் போட !
விட்டுக் குடுத்து வாதாடவா, இல்ல பொட்டுக்காகப்  போராடவா !
அங்காள அம்மனுக்குப் பொங்க வெச்சு மாளாது!
மங்காத்தாக் கண்ணீருக்கு , மாடக்கொளம்  காணாது !
ஆத்தாடி இந்தச் சொந்தம் வந்ததெல்லாம் யாரால!
பாவிமக நெஞ்சுக்குள்ள பால்சுரக்குதே உன்னால !
என் கதை எழுதப் போனா, எட்டு ராமாயணம் போதாது !
இதிகாசக் கண்ணகி, சீதைக் கெல்லாம் இந்தக் கதி நேராது !

சனி, 4 ஏப்ரல், 2015

கீற்றா? கீதமா?
ஓ.....நீர்......மகாத்மாவா? அந்த ஐந்நூறு ரூபாய் நோட்டில் புன்னகைபூப்பவர்தானே! திரையரங்குகள் தேசியகீதத்தைப் புறக்கணித்த மாதிரி , உன் சீடர்கள் உன்னையும் நிராகரித்தப் பிறகு....என்ன ஆயிற்று தெரியுமா? மலிவுப் பதிப்பாக வந்த உன் சத்திய சோதனைப் பதிப்பு, ராத்திரிப் புத்தகங்களின் இலவச இணைப்பாகும் நிலை அறிவாயா? நீஅக்டோபரிலும் ஜனவரியிலும் மட்டும் நினைக்கப் படுவது தெரியுமா? மாதச்சம்பளக்காரன் மாதக்கடைசியை நினைப்பது போல , உன்னை நினைவில் கொள்வதும் ஒரு வித சிரமந்தான்!
உன்தேகம் துளைத்த துப்பாக்கிக் குண்டை அப்போது உன் கடைசிச் சாம்பலில் கண்டெடுத்தார்களாம்! ஆனால் இப்போது முன்னேற்றம் என்ன தெரியுமா? நிகழும் துப்பாக்கிச் சூடுகளில் , சுட்ட  உடலில் தோண்டி எடுத்தால் ....ஒரு கனரகத் தொழிற்சாலை துவங்க தேவையான கச்சாப் பொருள் கிடைத்துவிடும்!
நீ போட்டக்கணக்கெல்லாம் பொய்த்தே போனதால் ....உன்னை...உன் நினைவு நாளில் மட்டும் நினைப்பதே நியாயம்!
ஒரே ஓர் ஆறுதல்......நகரத்து மகளிர்......உன்னை எப்போதும் ......நினைவு படுத்தியே புண்ணியம் பெறுவர்........உன்னைப் போல் அரை ...ஆடை.....அணிந்தே...!! 

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

அழகின் அருமையை அள்ளி வழங்கும் அந்த கிராமம்! நகரத்தைத் துப்பி நகர்ந்த சிட்டுக் குருவிகள் இசை பாடும் இங்கே! பறவைகள் களிப்புடன் பறந்தும், விளையாடும் சூழல்! அந்தி வந்தும் நகர மறுக்கும் நிழல்கள், அழகிய பூக்களின் வண்ணங்கள் வாசனையோடு! ஒற்றைக்கால் தவமிருக்கும் ஒருநூறு தென்னை மரங்கள்! அதோ அங்கே,  தம்மை வளர்த்த மண்ணின் நலத்தை விழுதுகள் கொண்டு விசாரிக்கும் ஆலமரங்கள்! தூரத்து வயல்களில் ....தொலைந்து போன தங்கள் வாழ்க்கையை , நிலங்களில் குனிந்தபடி நிமிராமல் தேடும் நிரந்தரக் கூலிகள்! மற்றும் சேற்றுச் செருப்பணிந்து வரப்புகளில் ஒயிலாக நடைபயிலும் வயல் மயில்கள்!
காணக் கண் கோடி வேண்டும்! மாசில்லாக் காற்றைக் காசில்லாம  சுவாசிக்க இன்னும் மூக்கு இருந்திருக்கலாம் என்றே தோன்றும்!
அந்த...கிராமத்தை.....ஒரு முறையேனும் சாவதற்குள் சந்திக்க ஏங்குமே ஏக்கம்.....அது...நியாயம்தானே!

வியாழன், 2 ஏப்ரல், 2015

சிறகும் சிறுமியும்

சிறகும் சிறுமியும் :

திடீரென்று வானம் பகலில் இருண்டது. பூனை உருட்டியக் கண்ணாடிக் குடமாய் உருண்டது பூமி. மருண்டது மானுடம்! அப்போது நிகழ்ந்தது அந்த ஆச்சரியம் ! வானில் மின்னிய வெளிச்சம் நடுவே சிறகு முளைத்த தேவதைத் தோன்றினாள்.சிறகுநடுங்க தேவதை சொல்லியது...இன்னும் சிறிது நேரத்தில் உருளும் உலகப் பந்துக் கிழிந்தே அழியப் போகிறது!
என் சிறகில் ஏறமுடிபவர்களை மாற்று கிரகம் சேர்ப்பேன்! இரண்டு நிபந்தனைகளுடன் ஐவர் மட்டுமே என்னுடன் வரமுடியும்! தனக்குப் பிடித்தப் பொருள் ஒன்றுடன் வரலாம்.

புஜ வலிமையோடு வாலிபன் ஒருவன், தன்னுடன் உடைந்த வளையல் அவள் நினைவாக! அடுத்து அரசியல் வாதி , எளிமைத் தோற்றமும் சுவிஸ் வங்கிக் கணக்குடன்! இன்னும் இறந்துவிட வில்லையை இருமி நிரூபித்துக் கொண்டிருக்கும் தாத்தா, கைநிறைய மருந்தும் , அரை அவுன்ஸு உயிருடன்! அனுதாப  அலையில் கவிஞன் காமக , தோளில்  ஜோல்னாப்பை அதில் அச்சுப் பிழை அதிகம் கொண்டுஅச்சில் வந்த  அவன் முதல் கவிதையுடன்!
கடைசியில் வந்தாள் ஓர் சிறுமி, தன் செல்ல நாய்க்குட்டியுடன்
மறுத்தது தேவதை, நாய்க்குட்டி ஒரு பொருளல்ல, உயிர், அனுமதியில்லை! உடனே சிறுமி சொன்னாள்.....நாய் இருக்கட்டும்....நான் வரவில்லையென்றே!
சிறகு சிலிர்த்தாள் தேவதை! சிறகு  சிலிர்த்த வேகத்தில் சிதறியே விழுந்தனர் மற்றோர்!
சிறகடித்துப் பறந்தே சென்றாள் தேவதை........சிறுமியுடனும், அவள் செல்ல நாயுடனும் .....!!!!!

புதன், 1 ஏப்ரல், 2015

கிராமம்

வாழ்க்கைப் பொதுவாகப் பூட்டிக் கிடக்கும்! சிரிப்பொலி சாவி கொண்டால் அது திறக்கும் !மரணம் அணுகாதத் திண்ணை, சிரிப்புச் சத்தம் கேட்கும் வீட்டிற்கே சொந்தம்! சிரிக்கத் தெரியா உதடுகள், முத்தமிடும் தகுதி இழப்பன!
இதிகாசங்கள்: இடம் மாறிய சிரிப்பினால் உருவானவை: சிரிக்கக் கூடாத  இடத்தில் சிரித்துத் தொலைத்தாள் - அது பாரதம்
சிரிக்க வேண்டிய இடத்தில், சிரிப்பைத் தவிர்த்தாள் - அது ராமாயணம் !
சிரிக்கத் தெரிந்த மிருகமே! சிரித்துதான் தொலையேன்!