வியாழன், 23 ஏப்ரல், 2015

சுமக்க முடியாச் சிலுவை!

சொன்னவள் நான்தான்! உனக்கும் சேர்த்து சுவாசிக்கிறேன், என்று சொன்னவள் நான்தான்! என் கண்களால் உன் ஒருவரைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை!சொன்னவள் நான்தான்! உங்கள் வாழ்க்கை எனும் கோப்பையை என் உயிர் பிழிந்து ஊற்றுவேன்! சொன்னவள் நான்தான்! நம் திருமணத்திற்கு வானம் நட்சத்திரங்களையும், கடல் முத்துக்களையும் அட்சதை போடும்! என்று சொன்னவள் நான்தான்! ஒருவேளை நாம் பிரிந்தால் ....மழை மேல்நோக்கிப் பெய்யும்! கடல் வற்றி அதன் மேல் ஒட்டகம் ஊர்வலம் போகும் ! காற்று மரிக்கும்! என்று சொன்னவள் நான்தான்! இதோ அடிக்கோடிட்ட இந்த வார்த்தைகளால் இதைச் சொல்வதும் நான்தான்! என்னை மன்னித்து விடுங்கள்! என்னை மறந்து விடுங்கள்!நான் காதல் கொண்டது நிஜம்! கனவு வளர்த்தது நிஜம்! என் ரத்தத்தில் இரண்டு அணுக்கள் சந்தித்துக்கொண்டால் உங்கள் பெயரையே உச்சரித்தது நிஜம்!என்னை மன்னித்து விடுங்கள்! என்னை மறந்து விடுங்கள்!காதலனைப் பிரிந்த எனக்கு, காதலைப் பிரிய முடியவில்லை!இந்தியக் காதல் என்பது காதலர்கள் மட்டும் சம்பந்தப் பட்டதில்லை! இந்தியா காதல் பூமியாக இருக்கலாம் ஆனால் காதலர் பூமியல்ல! காதலுக்குச் சிறகு மட்டுமே தெரியும்! கல்யாணத்திற்குத் தான் கால்களும் தெரியும்! எனக்குச் சிறகு தந்த காதலா, என் கால்களின் லாடங்களை யாரரிவார்? என் தாயை விட சாய்வு நாற்காலியை மிகவும் நேசிக்கும் என் தந்தை! சீதனம் கொணர்ந்தப் பழைய பாய் போல் கிழிந்த என் தாய்! பூப்பெய்தியதைக் கூட புரிந்து கொள்ளமுடியாத என் தங்கை! கிழிந்த பாயில் படுத்தபடி கிளியோபாட்ராவுக்காக ஏங்கும் என் அண்ணன்! கருப்பு வெள்ளை டிவியைக் கண்டபடிக் கலர்க் கனவுகள் காணும் என் தம்பி! ஆக இத்தனைப் பேருக்கும் மாதாமாதம் பிராணவாயு வழங்கும் ஒரே ஒரு நான்!கால்களில் லாடங்களோடு எப்படி ஓடி வருவேன் உங்களோடு? என்னை மறந்து விடுங்கள்! என்னை மன்னித்து விடுங்கள்!மேலை நாடுகளில் கல்யாணத் தோல்விகள் அதிகம்! இந்தியாவில் காதல் தோல்விகள் அதிகம்! இந்தியா காதலின் பூமிதான்! காதலர் பூமியல்ல! போகிறேன் ....உங்களை மறக்க முடியாதபடி! நீங்கள் என்னை மறப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்......போகிறேன்......என்னை மன்னித்து விடுங்கள்! என்னை மறந்து விடுங்கள்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு