புதன், 19 அக்டோபர், 2016

ஒரு நகரவாசியின் புலம்பல் :

சலித்து விட்டது!இத்தனை வருட நகர வாழ்க்கையில் ஒரே மாதிரியான இயந்திர வாழ்வின் சம்பவங்களால் நான் அலுத்து விட்டேன்! செவிப்பறை கிழிக்கும் இரைச்சல்கள்!காற்றை விஷமாக்கும் வாகன மற்றும் தொழிற்சாலைப் புகைகள்,வருஷமெல்லாம் நிறைமாத கர்ப்பிணியாக போக்குவரத்துச் சாலைகள்!குடியிருப்புகளில் யாருக்குமே அடுத்தவீட்டு எண் தெரியாத அந்நியங்கள்!செக்குமாட்டுச் சிந்தனைகள்! சிதிலமாகிப் போன ரசனைகள்!

இதயத்தில் என்னென்ன வேட்கை!இது இடைவேளை இல்லாத வாழ்க்கை! வாழ்வோடு போராட்டம் இங்கே! இதில் வாழ்கின்ற நிமிடங்கள் எங்கே?

நான் போகப் போகிறேன்!ஓசையற்ற ஓர் உலகம் காண! என்னுள் இறந்து கிடக்கும் மனிதனை எழுப்பப் போகிறேன்!மூளையால் வாழும் வாழ்க்கை விட்டு,இதயத்தால் வாழும் வாழ்க்கை நோக்கிப் போகிறேன்!

கழுத்தில் கிடக்கும் மச்சம் மாதிரி,மலைச்சரிவில் ஓர் கிராமம்!மலையின் ரகசியத்தை முனுமுனுத்துக் கொண்டு ,குதித்தபடி சலசலப்பு சங்கீதத்துடன் ஆடிஓடும் நதி!அந்த நதிக்கரை இருபுறமும் பச்சைபசேல் என்று கண்களைக் கட்டிப் போடும் விருந்து!ஓயாமல் அடிக்குதிங்குத் தென்றல்! ஒயிலாக இடுப்பு வளைத்து ஆடுதிங்கு ஆறு! சாயாமல் இருக்கின்ற தென்னை! தமிழ் பேசி வரவேற்குதே என்னை!மலைதொட்டு அடிக்கின்ற சாரல்! எந்தன் மடி தொட்டு நனைக்கின்ற தூறல்! தூரத்தில் நதியோடும் சத்தம்! என் துயரத்தில் பங்கேற்கும் நித்தம்! என்னோடு குயில் பாட வேண்டும்! அந்தக் குயிலோடு நான் பாட வேண்டும்!கண்ணோடு இமை மூட வேண்டும்! நான் காற்றோடு ஸ்ருதி சேர வேண்டும்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு