புதன், 19 அக்டோபர், 2016

வேண்டும் வரம் :

கருணையற்ற ஏய் காலனே.....முன்னோக்கி எனைநடத்தி முதுமையாக்கும் நீ.....பின்னோக்கி எனையிழுத்து மீண்டும் பிள்ளையாக்கக் கூடாதா?
கட்டில் கண்டு கிடந்தாலும், காதோரம் நரைத்தாலும்,தொட்டில் தந்த மனம் மட்டும் தொடர்ந்துவரக் கூடாதா ? இது வரை நான் செய்த பிழையெல்லாம்,கண்ணீரில் கலைந்து தொலைந்து போகக் கூடாதா?
கண்ணாடி பார்த்து முகம் கண்டறிதல் போல்,கண் பார்த்தே மனித மனம் கண்டறியக் கூடாதா?
ஆசையற்ற மனம் வாங்கி,அழிவற்ற உடல் வாங்கி,ஓசையற்ற ஓருலகில் ஒதுங்கிவிடக் கூடாதா?வாழ்வோடு வருந்தாமல், முடிவிற்கு முன்னாலே ,இரண்டுக்கும் இடையே நான் இளைப்பாறக் கூடாதா?
முட்டி  முட்டி அந்தியிலே பெறும் ஞானம்,வாழ்வின் ஆரம்பத்திலேயே வந்தருளக் கூடாதா?
போட்டிப் பொறாமைகளைப் புறந்தள்ளிச் சிரித்துவிட்டு,நீட்டியேப் படுத்து மனம் நிறைவுபெறக் கூடாதா?
வட்டங்கள் சுருங்கி வரும் வாழ்க்கைக்கு ள் சிக்காமல்,வெட்டவெளி போலே நான் விரிந்து கரைந்து போகக் கூடாதா?
விருட்சமாகப் போகும்  விதை போல, அறிவனைத்தும் அடக்கி வைத்து அருளி வரக் கூடாதா?
நான் அறியாமல் என் பிறப்பு நேர்ந்தது போல்,நான் அறியாமலே என் இறுதி நேர்ந்து விடக் கூடாதா ?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு