புதன், 19 அக்டோபர், 2016

முக்திக்கு வழி.....?

எல்லோரும் விழித்திருக்க , எவருக்கும் தெரியாமல்,திருட்டுத்தனமாக, *மலரை*முத்தமிட்டு,திக்குமுக்காடியதாம் *காற்று*!முக்தியின் மேல் மோகம் கொண்ட அந்த சோலைமலர், காற்றைக் கேட்டதாம் ,' முக்தியடைவது எப்படி?' ஆனால் காற்றோ மௌனம் பேசியது!
மலருக்கும் உண்டல்லவா,மலரும் நினைவுகள்! அன்று வாயுமண்டலம் வசீகரித்து மொட்டவிழ்த்த முதல் மூச்சு........அப்பப்பா என்ன சுகம் என்றே நினைத்து மகிழ்ந்தது!தனக்குக் தெரியாமலே தனக்குள் இருக்கும் தேனை,தனக்கே தானம் செய்த *வண்டிடமும்*முக்தி பற்றி பதிலில்லை! இந்நிலையில் ஒரு நாள் ,தன் புலிநகம் கொண்டு *பூக்காரி* அந்தப் பூவைக் கொய்தினாள்!வாசமே சுவாசம் ஆனதால் ,வாடும்வரை இறப்பில்லை!செடியில் தொடங்கியப் பயணம் பூக்காரி கூடைக்குத் தாவியது!ஒற்றை நாரில் தன்னை சுருக்குப் போட்டும் ,ஜீவன் கொண்டது அந்த சோலைமலர்! பூக்காரி மந்திரம் போடாமலே ,பூவை காசாக்கினாள்!மலர் விற்ற காசில் மண்ணெண்ணெய் வாங்கியே வீடு திரும்பினாள்!அவளிடமும் முக்தி பற்றி பதிலின்றி வாட தொடங்கியது அந்த அப்பாவி மலர்!இப்போது ,பூ,இருளை நெசவு செய்யும் இளம் மனைவி கூந்தலுக்கு பதவி உயர்ந்தது!தள்ளிப் படுத்தவனை ,வாசம் கொண்டு வாங்கி நசுங்கியது பூ!காலை வெயிலில் வாடியப் பூவை வாசலில் எரிந்தாள் வேலைக்காரி!புல்லைத்தேடி ஏமாந்தலைந்த நகரத்து கன்று ஒன்று,பூவை நன்றாக ருசித்தே மென்றுத் தின்றது!பூவின் யாத்திரை முடிவில் ,இறுதி வரை உடன் பயணித்தக் காற்று....மேலும் தாமதியாமல் ..... முக்திக்கு விளக்கமளித்தது! ' முக்தி என்று தனியாக ஒன்றுமில்லை........முட்டாள் பூவே.....காற்றில் கலந்த சுகந்தம்....வண்டுக்கு வழங்கிய தேன்....... பூக்காரியின் வாழ்வாதாரம்..... உறவுகளின் ஊடல்.......கன்றுக்குத் தீர்ந்த பசி.........இவையாவும் நீ பெற்ற முக்தியே !
சொர்க்கம் என்று ஒன்று ,தனியே கிடையாது!
' *மகிழச்செய்து மகிழ்வதே முக்தி*' என்று முடித்தது .....அந்த.....ஞானக் காற்று !

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு