வெள்ளி, 21 அக்டோபர், 2016

ஒரு மாறுதலுக்கு :

ஒரே மாதிரி உதிக்கும் சூரியன் !ஒரே மாதிரி வீசும் காற்று!ஒரே மாதிரி நகரும் வாழ்க்கை!மழையும் வழக்கம் போல் மேலிருந்து கீழ்!ஒரே மாதிரி தூக்கம் / கனவு / உணவு ! எப்படித்தான் இப்படியே வாழ்வதோ ? ......என்று சலிப்பு வந்தால்......இதோ தீர்வு :

வாரத்தில் ஓர் நாள் ,பகலெல்லாம் தூங்கி ,இரவில் விழிக்கலாம் ! மொட்டை மாடியில் மல்லாந்துப் படுத்து ,வானத்தின் நீள,அகலம் அளக்கலாம் ! நட்சத்திரம் எண்ணலாம்! பட்டாம் பூச்சிப் பிடித்து...பறக்க விடலாம் ! வயதாக, ஆக,வாழ்வோடு ஏன் விவாகரத்து? குழந்தைகளோடு கூடி விளையாடி.... திட்டமிட்டு.....தோற்றுப் போகலாம் !கண்ணிரண்டும் மூடியபடி,தொலைபேசியில் ஓர் எண் அடித்து,எதிர்முனையில் எந்த நபர் வரினும்,அன்னாரை அன்புடன் விருந்துக்கு அழைத்து,வாங்கிக் கட்டிக் கொள்ளலாம்! வீட்டுப்பிள்ளைக்கு விடுமுறை விட்டு,நீங்கள் பள்ளிக்கு சென்று வரலாம் !மேகம் உடைந்து மழை பெய்தால்,ஓடிச் சென்று தொப்பையாய் நனையலாம்!மழை பெய்த களிமண் நிலமாய்,மனதை எப்போதும் நெகிழ்வாய் வைக்கலாம் ! ஓடும் பேருந்தில் ஏறிய பெண் உதிர்த்தப் பூவை,பணம் கண்டெடுத்தது போல் காவல் நிலையம் ஒப்படைக்கலாம் !
மரணத்தில் கூட.....மாறுதல் காணலாம் ! அழாத ஒவ்வொரு ஆத்மாவுக்கும் , அரை கிலோ அல்வா அன்போடு கொடுக்கலாம் !

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு